இலங்கையில் சீரற்ற காலநிலை – 4 பேர் மரணம் – ரயில் சேவை பாதிப்பு

சீரற்ற காலநிலையின் விளைவுகளால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 75 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2 ஆயிரத்து 625 குடும்பங்களில் இருந்து 10 ஆயிரத்து 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மொத்தமாக 4 பேர் மரணத்தைத் தழுவியுள்ளார்கள். இரண்டு வீடுகள் முழுமையாகவும், 402 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
காலி மாவட்டத்தில் பாதிப்புக்கள் அதிகம் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
மஹஓயா, தெதுறுஓயா ஆற்றுப்படுகைகளுக்காக விடுக்கப்பட்ட வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவித்தல் நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மழையுடன் கூடியகாலநிலைக்கு மத்தியில் நதிகளின் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு நோக்கிச் செல்லும் சாகரிகா அலுவலக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி, கட்டுகொடையில் ரயில் பாதையில் மரம் ஒன்று விழுந்ததால், அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் சாகரிகா ரயில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.