ஈழ மக்களின் குடியுரிமை பிரச்சினை – தேர்தல் காலத்தில் மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை பிரஜைகளுக்கு குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், இந்த பிரச்சினை ஆழ்ந்த மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்று விவரித்துள்ளார்.
சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம்களுக்குள்ளும் வெளியேயும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வசித்து வருவதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1983 முதல், அடுத்தடுத்த தமிழக அரசுகள், மத்திய அரசின் ஒப்புதலுடன், இலங்கையில் இன மோதலில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு தங்குமிடம், கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளன. இருப்பினும், பலருக்கு குடியுரிமை அல்லது நீண்டகால விசா அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைக் குறிப்பிட்டு, குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிப்பதைத் தடைசெய்யும் முந்தைய நிர்வாக வழிமுறைகளை இரத்து செய்யுமாறும், பொருத்தமான இடங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளைத் தள்ளுபடி செய்யுமாறும், ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில், நீண்டகாலமாக தங்கியிருந்த போதிலும், இதுவரை 11 இலங்கை அகதிகளுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மட்டுமே வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார், மீதமுள்ள பத்து பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர், இது அவர்களின் நிலையை முறைப்படுத்துவதில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





