CID வசமாகும் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் உயர்மட்ட அரசு அதிகாரிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தைத் தவிர, உத்தியோகபூர்வ குடியிருப்புகள் உட்பட மற்ற அனைத்து வசதிகளும் இரத்து செய்யப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் இன்று அல்லது நாளை சபாநாயகரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச தற்போது வசிக்கும் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பு வசித்து வந்தார். அதற்கு முன்பு, பல அமைச்சர்கள் அங்கு வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.