மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தி இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போது மேல் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இன்று இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றப்பத்திரிகைகள் வாசித்துக் காட்டப்பட்டன.
முன்னாள் அமைச்சர்களைத் தவிர சரத் எதிரிசிங்க, அஜித் மில்ரோய், ஜயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரகோன் ஆகியோரே இவ்வாறு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்ட ஏனைய பிரதிவாதிகளாவர்.
இதன்போது, அனைத்து பிரதிவாதிகளையும் பிணையில் விடுவித்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன, வழக்கை மீண்டும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.





