ஸ்பெயினில் வினோத திருட்டு – உணவகங்களில் மாயமான 1,100 நாற்காலிகள்
ஸ்பெயினில் உள்ள உணவகங்களில் இருந்து ஆயிர கணக்கான நாற்காலிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாற்காலிகளைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் ஏழு பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஆறு ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயற் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
சந்தேக நபர்கள் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் நாட்டின் 18 வெவ்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்காக உணவகங்களுக்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலிகளை இந்தக் கும்பல் இலக்கு வைத்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 1,100க்கும் அதிகமான நாற்காலிகள் திருடப்பட்டதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 60,000 யூரோக்கள் என்றும் காவல்துறை மதிப்பிட்டுள்ளது. திருடப்பட்ட இந்த நாற்காலிகளைச் சந்தேக நபர்கள் பின்னர் விற்றுள்ளதாகவும் காவல்துறை மேலும் கூறியது.





