எமோஜி அனுப்புவதால் ஏற்படும் நன்மை – ஆய்வில் புதிய தகவல்!

உறவுகளை மேம்படுத்த எமோஜிக்கள் பெரிதும் உதவுவதாக சமீபத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இப்போது பெரும்பாலும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே ஒருவரையொருவர் தொடர்புகொள்கின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சாட்(Chat) செயலிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாட் செயலிகளில் ஒருவருடன் உரையாடுவதற்கு செய்திகளை அனுப்பும்போது எழுத்துகளுடன் எமோஜி அல்லது ஸ்மைலி குறியீடுகளும் அதிகம் பயன்படுத்தப்படுத்துகின்றன. அதேபோல எழுத்துகளாக வார்த்தைகளாக அன்றி, தனியாகவும் வெறும் எமோஜிக்களும் அனுப்பப்படுகின்றன. அதன் மூலமாகவும் தங்கள் பதிலைக் கூறுகின்றனர்.
சாதாரணமாக நாம் கடினமான சில வார்த்தைகளை உபயோகித்தால்கூட அதனுடன் இந்த எமோஜிக்களைச் சேர்க்கும்போது அது லேசானதாக மாறிவிடுகிறது.
அந்தவகையில் ஒருவருடனான உரையாடலில் எமோஜிக்களை அடிக்கடி பயன்படுத்தும்போது உறவுகள் மேம்படுவதாகவும் அந்த நபருடன் உறவில் நெருக்கம் ஏற்படுவதாகவும் புதிய ஆய்வு கூறுகிறது. இது உணர்ச்சிகளின் சரியான வெளிப்பாடாக இருப்பதால் எதிர் நபரிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு பற்றிய ஆய்வாளரான யூன் ஹு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் ‘பிஎல்ஓஎஸ் ஒன்’ என்ற இதழில் வெளியாகியுள்ளன.
23 முதல் 67 வயதுடைய 260 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒரே மாதிரியான உரையாடல், எமோஜி இல்லாமலும் எமோஜியுடனும் காட்டப்பட்டன. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஒருவரை கற்பனை செய்துகொண்டு அந்த உரையாடலைப் படிக்க அறிவுறுத்தப்பட்டனர். இப்போது அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று கேட்கப்பட்டது. அவர்களின் முக மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.
அவர்கள் கூறியதன்படி, எமோஜிக்கள் இருந்தால் அந்த குறுஞ்செய்திக்கு பதிலளிக்கத் தூண்டுவதாகவும் உணர்ச்சிமிக்கதாகவும் இருந்ததாகக் கூறியுள்ளனர்.
“ஒரு செய்திக்கு பதிலளிக்கத் தூண்டினாலே அவர்களிடையே உரையாடல் தொடரும். இதனால் அவருடனான உறவு மேம்படும், நெருக்கம் ஏற்படும், அந்த உறவில் திருப்தியும் கிடைக்கும்” என்று ஆய்வாளர் யூன் ஹு கூறினார்.
மேலும் முகம் போன்ற வடிவமுள்ள எமோஜிக்கள், முகம் அல்லாத வேறு எமோஜிக்கள் ஆகிய இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதாகவும் கூறுகிறார்.
முகம் போன்ற வடிவம் உள்ள எமோஜிக்கள் உரையாடல்களில் அதிகமாக நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது நெருக்கமானவர்களுடன் மேலும் உணர்வுப்பூர்வமாக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.