இலங்கை : குளியலறையில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு! தாயார் கைது

புத்தளம் மருத்துவமனையில் பெண்கள் தங்கி சிகிச்சை பெறும் அறையின் குளியலறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த யுவதி புத்தளம் பகுதியில் உள்ள உடற்பிடிப்பு மையத்தில் தொழில் புரிபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் – ஆணவாசல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட யுவதி, புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது, யாருக்கும் தெரியாமல் இரகசியமாக குழந்தையொன்றைப் பெற்றெடுத்து அதனை குளியலறையில் வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் அறைக்கு பொறுப்பான தாதியர் ஒருவரால் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதி காவல்துறையினரின் பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த மரணம் தொடர்பில் புத்தளம் பதில் நீதவான் டி.எம். இந்திக தென்னகோன், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.