கொழும்பில் இனி எங்கள் ஆட்சி: கூட்டு எதிரணி அறிவிப்பு
“ கொழும்பு மாநகரசபையில் கூட்டு எதிரணியே இனி செல்வாக்கு செலுத்தும். நாமே கொழும்பை ஆள்வோம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்று தோற்கடிக்கப்பட்டது.
வாக்கெடுப்பின்போது ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் கிடைத்தன. இது தேசிய மக்கள் சக்திக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்கூறியவை வருமாறு,
“கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவின்போது பகிரங்க வாக்கெடுப்பை கோரி இருந்தோம். ஆனால் இரகசிய வாக்கெடுப்பே நடத்தப்பட்டு, மோசடியான முறையில் ஆட்சியை பிடித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் இந்த ஜனநாயக விரோத செயலை கூட்டு எதிரணியாக இன்று நாம் தோற்கடித்துள்ளோம்.
எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஆறு மாத காலப்பகுதிக்குள் நீதியை பெற்றுள்ளோம் என்பதை ஜனாதிபதியிடம் கூறிக்கொள்கின்றோம்.
தேசிய மக்கள் சக்திக்கு கொழும்பு மாநகரசபையில் இனி ஆட்சி அதிகாரம் இல்லை. கூட்டு எதிரணி வசமே அதிகாரம் உள்ளது என்பதையும் குறிப்பிடுகின்றோம்.” – என்றார்.
முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு கூறினாலும், உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்தின்படி மீண்டும் வரவு- செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியும்.
14 நாட்களுக்குள் இதனை செய்வதற்கு அதிகாரம் உள்ளது.
இரண்டாவது தடவையும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால், வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் துறைசார் அமைச்சருக்கு உள்ளது எனக் கூறப்படுகின்றது.
எனவே, சபை நிறுவப்பட்டு ஈராண்டுகளுக்கு ஆட்சி அதிகாரம் தொடர்பில் சர்ச்சை எழாது எனத் தெரியவருகின்றது.





