ஜனாதிபதி அநுரகுமாரவின் வரவு – செலவுத் திட்டத்தை ஆராய சஜித் அணி விசேட குழு அமைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
அதற்கமைய, முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தை ஆராய்ந்து, தர்க்க ரீதியிலான கருத்துகளை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இதற்காக கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் சில பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை அக்கட்சி நியமிக்கவுள்ளது. வெறுமனே விமர்சனங்களை முன்வைக்காமல், புள்ளிவிவரம் மற்றும் விஞ்ஞானப்பூர்வமான கருத்துகளை முன்வைக்கும் நோக்கிலேயே இந்தக் குழு அமைக்கப்படுகிறது.
வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது.
இது 2 ஆம் வாசிப்பாக கருதப்படும். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெறும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அரச மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
2026 பாதீட்டில் நிதி அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (634 பில்லியன் ரூபா)
பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாவும், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளது.