செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பறிபோகும் வேலைகள் – ஐ.நா. எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், உலகில் நாற்பது சதவீதப் பணிகள் பாதிக்கப்படக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், உலகளவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வேலைகளில் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் குறைந்த ஊதிய வேலைகளில் செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை உருவாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் சில வேலைகளில் பாதிப்புகள் இருந்தாலும், இதன்மூலம் புதிய தொழில்கள் உருவாகி பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் ஐ.நா.அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2033ஆம் ஆண்டுக்குள் AI தொழில் துறையின் சந்தை மதிப்பு நான்கு புள்ளி எட்டு டிரில்லியன் டாலர்களை எட்டும் என்றும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, 41 சதவீத நிறுவனங்கள் AI கருவிகளைப் பயன்படுத்துவதற்காக தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், அனைவரும் பயனடைவதை உறுதி செய்யவேண்டும் என்றும் ஐ.நா., அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.