மனிதர்களைப் போல ஏ.ஐ-யால் இன்னும் கற்பனை செய்ய முடியவில்லை

செயற்கை பொது நுண்ணறிவு (ஏ.ஜி.ஐ) அல்லது மனித அளவிலான அறிவாற்றல் திறன்களைக் கொண்ட ஏ.ஐ. அமைப்புகள் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் தொலைவில் இருக்கலாம் என்று கூகிள் டீப்மைண்ட் தலைமை நிர்வாக அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ் கூறியுள்ளார். ஏப்ரல் 22 சிபிஎஸ் நியூஸின் 60 நிமிட நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில் ஹசாபிஸ் இதனை கூறினார்.
செயற்கை நுண்ணறிவு தற்போது புத்திசாலித்தனமாக இயங்கி வருகிறது. ஆனால், மனிதர்களைப் போல சிந்திக்கும் இயந்திரங்களை நம்மால் உருவாக்க முடியுமா என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியே என அவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மனிதர்களைப் போல சிந்திக்கவும், கற்கவும், எந்த ஒரு பணியையும் செய்யவும், உடனடியாக முடிவு எடுக்கவும் செயற்கை நுண்ணறிவால் முடியாது. மனிதன் கொடுக்கும் கட்டளைகளை மட்டுமே செய்யும் தன்மை உடையது AI ” என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் இந்த கருவிகள் மெதுவாக மேம்பட தொடங்கும். எப்படியாக இருந்தாலும் மனிதனே எல்லாவற்றிற்கும் உயர்ந்தவன் என்றும் அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் ரோபாட்டிக்ஸில் உள்ளது என்றும், ஒரு மருந்தை வடிவமைக்க 10 ஆண்டுகள் மற்றும் பில்லியன் டாலர்கள் ஆகும். அதை சில ஆண்டுகளிலிருந்து மாதங்களாகவோ அல்லது வாரங்களாகவோ ஏ.ஐ. கருவிகள் குறைக்கலாம் என்றும் அவர் கூறினார். “அடுத்த 2 ஆண்டுகளில் ஏ.ஐ. ஒரு திருப்புமுனையை கொண்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன், உண்மையில் பயனுள்ள விஷயங்களைச் செய்யத் தொடங்கக்கூடிய ஹ்யூமனாய்டு ரோபோக்கள், பிற வகை ரோபோக்களின் ஆர்ப்பாட்டங்களை நாங்கள் நடத்துவோம்” என்று அவர் கூறினார்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் கதை எழுதலாம், கட்டுரை எழுதலாம், சதுரங்கம் விளையாடலாம், ஒரு மனிதன் செய்யக்கூடிய பல விஷயங்களை செய்யலாம். ஆனால் அதே நேரத்தில், சிக்கல் தீர்க்கும் திறன், தர்க்கம் செய்வது, சிந்தனை செய்வது, புதிய சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது ஆகியவை இன்னும் மனிதனால் மட்டுமே செய்யக்கூடிய செயல்களாக உள்ளன. ஏ.ஐ. அசாதாரண திறமைகளை பெற்றிருந்தாலும், மனிதன் செய்யும் பல வேலைகளை இன்னும் செயற்கை நுண்ணறிவு செய்ய முடியாது. அதற்கு இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
டெமிஸ் ஹசாபிஸ் நரம்பியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற கணினி விஞ்ஞானி ஆவார். கேம்பிரிட்ஜ், எம்.ஐ.டி, ஹார்வர்டு பல்கலைக் கழகங்களில் படித்தவர். 2014 ஆம் ஆண்டில் கூகிள் கையகப்படுத்திய டீப் மைண்ட் என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகத்தை ஹசாபிஸ் இணைந்து நிறுவினார். ஜான் ஜம்பர் என்ற மற்றொரு AI ஆராய்ச்சியாளருடன் சேர்ந்து, ஹசாபிஸ் ஆல்பாஃபோல்ட் எனப்படும் புரதங்களின் கட்டமைப்பைக் கணிக்கக்கூடிய AI மாதிரியை உருவாக்கினார். இவர்கள் இருவருக்கும் 2024-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே ஆண்டு இங்கிலாந்து மன்னர் சார்லஸால் ஹசாபிஸுக்கு நைட்ஹுட் பட்டமும் வழங்கப்பட்டது.
ஏ.ஐ. துறையில் புதுமை என்பது நம்பமுடியாத அளவிற்கு வேகமாக நகர்கிறது. நிச்சயமாக, கடந்த சில ஆண்டுகளில் இந்தத் துறையின் வெற்றி இன்னும் அதிக கவனம், வளங்கள், திறமைகளை ஈர்த்துள்ளது என்றார்.