2வது போட்டியில் விராட் கோலி விளையாடுவதில் சந்தேகம்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border Gavaskar Trophy) விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுவிட்ட குதூகலத்துடனும், 1-0 என்ற முன்னிலையுடனும் இந்திய அணி (Team India) இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவாக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் (Adelaide Oval) வரும் டிச. 6ஆம் தேதி தொடங்கும் நிலையில், அதற்கும் முன் இந்திய அணி Prime Minister’s XI அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் பகலிரவாக விளையாடி, அதிலும் வெற்றி வாகை சூடியது. எனவே, நியூசிலாந்து தொடரினால் ஏற்பட்ட பின்னடைவை இந்த வெற்றிகள் ஓரளவுக்கு சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது எனலாம். இருப்பினும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டிய அழுத்தத்தில் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்கிறது. இதே அழுத்தம் ஆஸ்திரேலியா மீதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான (Team Australia) இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்திய அணிக்குள் வருவதால் தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரேல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என தெரிகிறது. கேஎல் ராகுல் (KL Rahul) ஓப்பனிங்கிலும், ரோஹித் சர்மா (Rohit Sharma) மிடில் ஆர்டருக்கும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மான் கில்லுக்கு (Shubman Gill) அதே 3ஆவது இடம் கிடைக்கும். மறுமுனையில், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது. அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. வேகப்பந்துவீச்சு பிரிவில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) இரண்டாவது போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் விராட் கோலி பயிற்சிக்கு வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில், அதில் அவரது கால் முட்டியில் பேண்டேஜ் ஒட்டுப்பட்டுள்ளதை காண முடிந்தது. இதுகுறித்து வெளியான தகவலில், அவருக்கு பயிற்சியில் சிறு காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவக் குழுவினர் அதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை அவரது காயம் பலமானதாக இருக்கும்பட்சத்தில், அடுத்தடுத்த போட்டிகளை கருத்தில் கொண்டு விராட் கோலிக்கு அடிலெய்ட் டெஸ்டில் ஓய்வு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த போட்டியில் சிறப்பான சதத்தை அடித்தது மட்டுமின்றி, அடிலெய்டிலும் விராட் கோலி இதுவரை 3 டெஸ்ட் சதங்கள், 2 ஓடிஐ சதங்களை விளாசியுள்ளார்.
மேலும் அடிலெய்ட் ஓவலில் 4 டெஸ்ட் போட்டிகளை விளையாடி 63.62 சராசரியில் மொத்தம் 509 ரன்களை அடித்துள்ளார். அடிலெய்டில் இன்னும் 102 ரன்களை அடித்தால், இந்த மைதானத்தில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த ஆஸ்திரேலியா அல்லாத பேட்டர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். ஒருவேளை விராட் கோலி இங்கு விளையாடாவிட்டால் அவருக்கும், இந்திய அணிக்கும் பெரிய பின்னடைவாக முடியும்.