மும்பையில் 8 வயது சிறுமியை காப்பாற்ற சென்ற 28 வயது இளைஞர் மரணம்

மும்பையில் ஒரு வடிகாலில் விழுந்த எட்டு வயது சிறுமியை 28 வயது இளைஞர் ஒருவர் மீட்டதாகவும், பின்னர் அவர் உள்ளே சிக்கிக் கொண்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பந்த்நகர் காவல் நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுமி வடிகாலில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது, உள்ளே விழுந்தாள். இருப்பினும், வடிகாலின் ஆழம் காரணமாக சிறுமி வெளியே வர சிரமப்பட்டாள்.
தினசரி கூலித் தொழிலாளியான ஷாஜாத் ஷேக், அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதாக போலீசார் தெரிவித்தனர். உடனடியாக அவளை மீட்க வடிகாலில் இறங்கினார்.
ஷேக் சிறுமியை வடிகாலுக்கு அருகில் நின்ற மற்றொருவரிடம் ஒப்படைத்த பிறகு, அவர் வெளியே வர முயன்றார், ஆனால் முடியவில்லை. இறுதியில் அவர் வடிகாலில் மூழ்கி இறந்தார்.
தீயணைப்பு படை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.