பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி யாழில் போராட்டம்!
“பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில், பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி நாளைமறுதினம் (28) சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இப்போராட்டம், அன்றைய தினம் காலை யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகவுள்ளது.
அங்கிருந்து பேரணியாகச் செல்லும் போராட்டக்காரர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை சென்றடைந்து தமது கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தாயகச் செயலணியின் பிரதிநிதிகள் இப்போராட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டனர்.
இதன்போது, கட்சி பேதங்களைக் கடந்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் இப்போராட்டத்தில் கைகோர்க்குமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
“தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் நீண்டகாலமாகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
இச்சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், பழைய சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக, அதற்கு மாற்றாகப் புதியதொரு சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது.
எம்மைப் பொறுத்தவரை இச்சட்டம் பழையதோ அல்லது புதியதோ, அதன் வடிவம் எதுவாக இருந்தாலும் அது தேவையற்றது.
மக்களைப் பாதிக்கும் இத்தகைய கொடிய சட்டங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
அரசின் புதிய சட்ட முயற்சியைக் கண்டித்தும், நீதியை வலியுறுத்தியுமே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” – என்று தாயகச் செயலணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.





