சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்நோக்கவேண்டியேற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீண்டு வருகின்ற போதிலும், துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், உலகளாவிய நிலையற்ற காரணிகளின் அடிப்படையில் இந்த நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ODI குளோபல் மற்றும் வறுமை பகுப்பாய்வு மையத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உருமாறும் பொருளாதார வளர்ச்சியை 2025 முதல் 2030 நிலைநிறுத்துதல் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, மத்திய வங்கியின் தற்போதைய உதவி ஆளுநர் சந்திரநாத் அமரசேகர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் யெவெட் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் சிரிமல் அபேரத்ன ஆகியோர் அடங்கிய ஒரு சுயாதீன ஆராய்ச்சி குழுவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதுடன், தற்போதுள்ள பேரியல் பொருளாதார உறுதிப்படுத்தலைப் பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளைச் செயற்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட வறுமை விகிதம் மக்கள் தொகையில் 25 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடுமையான கடன் மறுசீரமைப்பு மற்றும் அதிகரித்து வரும் வறுமையைத் தவிர்க்கக் கட்டமைப்பு சீர்திருத்தங்களை அவசரமாகச் செயற்படுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




