கொழும்பு மாநகர சபையில் அரசியல் டீல்: மனசாட்சி எங்கே?
அரசியல் “டீல்” மூலமே கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் ரிசா சாருக் குற்றஞ்சாட்டினார்.
அன்று மனசாட்சி குறித்து பேசிய மேயர், இன்று கண்ணாடி முன் சென்று தனது மனசாட்சி குறித்து வினவவேண்டும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரிசா சாருக் மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய மக்கள் சக்தி குழுவினரை இவரே வழிநடத்துகின்றார்.
“ வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடந்தது. எமது கூட்டு எதிரணியில் உள்ள உறுப்பினர் ஒருவரை பொலிஸார் அழைத்து சென்றனர். அவர் கடைசி நேரத்திலேயே வாக்களிக்க வந்தார்.
மேலும் இரு உறுப்பினர்களை காணவில்லை. தொலைபேசியும் செயலிழந்துள்ளது. கூட்டு எதிரணியில் இருந்த உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
எனவே, இங்கு என்ன நடந்துள்ளது என்பதை ஊடகவியலாளர்கள் நிச்சயம் அறிவார்கள்.
வரவு- செலவுத் திட்டம் அன்று தோற்கடிக்கப்பட்டபோது மேயர் மனசாட்சி குறித்து கருத்து வெளியிட்டார். எனவே, ஆளுங்கட்சிக்கு இன்று எவ்வாறு பெரும்பான்மை கிடைத்தது என்பது பற்றி அவர் அவரது மனசாட்சியிடம் கேட்க வேண்டும்.
கூட்டு எதிரணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. மக்களுக்காக நாம் முன்னிலையாவோம்.” – என்றார் ரிசா சாருக்.





