யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு ஆரம்பம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட சைவசித்தாந்தத் துறையும், உயர் பட்டப் படிப்புகள் பீடமும் இணைந்து நடாத்தும் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு – 2026 நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கூவர் கலையரங்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி தலைமையில் சிறப்புற ஆரம்பமானது.
மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மங்கல விளக்கேற்றல், நந்திக் கொடியேற்றல் மற்றும் திருமுறைப் பாராயணத்துடன் ஆரம்பமான நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் நிகழ்நிலையில் கலந்து கொண்டு ஆதார சுருதி உரை ஆற்றினார்.
மாநாட்டின் முக்கிய அம்சமாக ஆய்வரங்கக் கட்டுரைக் கோவையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா வெளியிட்டு வைக்க சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி.ஆறு.திருமுருகன் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து சமகாலத்தில் சைவம் மற்றும் சைவசித்தாந்தப் பணிகளில் தம்மை அதிகம் ஈடுபடுத்தி வரும் இளவல்களான கலாநிதி ஏரம்பமூர்த்தி அனுசாந்தன், அகில இலங்கை சைவமகா சபையின் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப.நந்தகுமார், மருத்துவர் கி.பிரதாபன் ஆகியோர் விசேட விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.





