மீண்டும் ஆரம்பமானது யூரோஸ்டார் ரயில் சேவை
மின்சாரக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை ஸ்தம்பிதமடைந்திருந்த லண்டன் மற்றும் பாரிஸ் இடையிலான சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மின்தடை மற்றும் ரயில் செயலிழப்பு காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குச் செல்ல முடியாமல் லண்டன் செயின்ட் பான்க்ராஸ் (London St Pancras) நிலையத்தில் சிக்கித் தவித்தனர்.
தற்போது பெரும்பாலான சேவைகள் மீளத் தொடங்கியுள்ள போதிலும், கடந்த காலத் தாமதங்களின் தாக்கம் காரணமாக இன்றும் சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என யூரோஸ்டார் (Eurostar) எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுத் தொகையையும் மீள வழங்குவதுடன், மேலதிகமாக 150 சதவீத இழப்பீட்டு வவுச்சர்களையும் வழங்குவதாக அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.





