பாகிஸ்தானில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்!
வடமேற்கு பாகிஸ்தானில் காவல்துறையினரின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிதாரிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 05 அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல்தாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தின் கரக் (Karak) மாவட்டத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு வயல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை குறிவைத்தே மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாகவும் காவல்துறை தலைவர் நூர் வாலி (Noor Wali) தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களைக் கண்காணிக்க ஒரு பெரிய காவல்படை அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) மற்றும் கைபர் பக்துன்க்வா முதல்வர் சுஹைல் அஃப்ரிடி ( Suhail Afridi) ஆகியோர் இந்தத் தாக்குதலைக் கண்டித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் தனித்தனி அறிக்கைகளில் தெரிவித்துள்ளனர்.





