முல்லைத்தீவில் சீரற்ற காலநிலையால் மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் சரிந்து விழுந்ததில் வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (27) காலை முல்லைத்தீவு நகரில், செலான் வங்கியின் முன்பாக உள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வீதியில் ஒரு புளியமரம் சரிந்து விழுந்துள்ளது. இதனால். குறித்த இடத்தில் வீதிப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.
இவற்றை விரைந்து அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணியாளர்கள், பிரதேச சபை பணியாளர்கள், மின்சார சபை பணியாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவுடன் இணைந்து விழுந்த மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பின் தொலைபேசி கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதுடன் தற்போது அவற்றை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
குறித்த அனர்த்தத்தினால் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு கனக ரக வாகனங்கள் போன்ற எந்தவொரு பெரிய வாகனங்களும் இவ் வீதியை பயன்படுத்த வேண்டாம் என்பதனை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது







