சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஹமாஸ் – அமெரிக்காவின் அறிக்கையால் பரபரப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது.
இந்நிலையில் காசாவில் (Gaza) வாழும் பாலஸ்தீன மக்கள் மீது உடனடி தாக்குதல்களை நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு (Palestinians) எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல் என்றும், மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து (Egypt), கத்தார் (Qatar ) மற்றும் துருக்கி (Turkey )உள்ளிட்ட காசா (Gaza) அமைதி ஒப்பந்தத்தின் பிற உத்தரவாததாரர்களிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளதாகவும், ஹமாஸ் அதன் போர் நிறுத்த விதிமுறைகளை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“ஹமாஸ் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தால், காசா மக்களைப் பாதுகாக்கவும், போர் நிறுத்தத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை மேலும் விவரங்களை வழங்கவில்லை. அத்துடன் அமெரிக்காவின் மேற்படி கருத்துக்கான ஆதாரத்தையும் வெளியிடவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் தற்போது நடந்து வருகிறது . உயிருடன் உள்ள அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இறந்தவர்களின் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தனது சிறைகளில் இருந்த 250 பாலஸ்தீன கைதிகளையும், காசாவிலிருந்து 1,718 கைதிகளையும் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





