பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) போர்க்குற்ற நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
பங்களாதேஷில் அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்தாண்டு பாரிய போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதனை ஒடுக்குவதற்கு பலத்தை பயன்படுத்த ஹசீனா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன்விளைவாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1400 பேர் உயிரிழந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் அந்நாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து அமைந்த இடைக்கால அரசாங்கம் சிறப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், ஷேக் ஹசீனா குற்றவாளி என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இந்நிலையிலேயே மேற்படி மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கானுக்கும் (Asaduzzaman Khan) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் முன்னாள் காவல்துறைத் தலைவர் ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறிய நிலையில் அவருக்கு ஐந்து ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசீனா மறுத்துள்ளார். அத்துடன் அரசியல் பழிவாங்கள் எனவும் விமர்சித்துள்ளார்.
அத்துடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவரது அவாமி லீக் கட்சி (Awami League party) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





