எல்லை மோதல்: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை
 
																																		எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான மோதல்களால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான பதற்றத்தைக் குறைக்க, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன.
முன்னதாக, துருக்கி (Türkiye) மற்றும் கத்தார் (Qatar) ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் வகித்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் பயனற்று முடிவடைந்ததாக பாகிஸ்தான் நேற்று முன்தினம் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த புதிய முயற்சி உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் நடந்த ராணுவ மோதல்கள், டஜன் கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாகின. குறிப்பாக, பாகிஸ்தான் மண்ணில் தாக்குதல் நடத்தும் போராளிக் குழுக்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் அடைக்கலம் வழங்கப்படுவதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை காபூல் மறுக்கிறது.
துருக்கியில் நடந்த நான்கு நாள் பேச்சுவார்த்தைகள், ஆப்கானிஸ்தான் தரப்பு ‘தர்க்கரீதியான கோரிக்கைகளை’ ஏற்க மறுத்ததால் தோல்வியடைந்ததாக பாகிஸ்தான் தரப்பு குற்றம் சாட்டியது. இதனால், இருதரப்புக்கும் இடையே முழுப் போர் வெடிக்கும் அபாயம்கூட இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்திருந்தார்.
முதல் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, அதனை அடுத்து துருக்கி மற்றும் கத்தார் ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன.
 
        



 
                         
                            
