நான்கு வயதில் தேசிய விருது வென்ற த்ரிஷா தோசர்

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நான்கு வயதே ஆன சிறுமி ஒருவர் தன்னுடைய முதல் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தில்லியில் உள்ள விக்ஞான் பவனில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று(செப்.23) நடைபெற்றது.
தமிழகத்தின் சார்பில், சிறந்த படத்துக்காக பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும், வாத்தி பட பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. இதில், நான்கு வயது சிறுமி ஒருவர் தேசிய விருது பெற்றிருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வர்ணனையாளர் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது… ‘த்ரிஷா தோசர்’ என அழைத்ததும் ‘க்யூட்டாக’ சேலை அணிந்துகொண்டு மேடைக்கு வந்த நான்கு வயதே ஆன அவர் மேடைக்கு வந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதைப் பெற்றுக்கொண்டார்.
அவர் மேடையில் ஏறியதும் அந்த அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. அந்தச் சிறுமி விருது பெறும்போது ஷாருக் கான், ராணி முகர்ஜி உள்ளிட்டோரும் வியப்பாக பார்த்தனர்.
யார் இந்த த்ரிஷா தோசர்?
2023 ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் பிரபல இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே நடிப்பில் மராத்திய படமாக ‘நாள் – 2’ வெளியானது.
கதையின் முக்கிய கதாபாத்திரமான சைதன்யா, நீண்ட நாள்களுக்குப் பின்னர், தன்னுடைய தாய், உடன் பிறப்புகளைச் சந்தித்தபின் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வணிக ரீதியில் பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் தோல்வியடைந்தது. இதில், சிமி என்ற கதாபாத்திரத்தில் அப்போது 2 வயதேயான த்ரிஷா தோசர் நடித்திருந்தார்.
த்ரிஷா தோசரின் அப்பாவித்தனமான நடிப்பு மொத்தமாக போட்டியிட்ட 332 படங்களில் அவருக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்துள்ளது. மேலும், இளம் வயதில் தேசிய விருதை வென்றவர் என்ற சாதனையையும் த்ரிஷா தோசர் பெற்றுள்ளார்.
குழந்தை நட்சத்திரம் த்ரிஷா தோசருக்கு முதல் படம் என்றாலும், ‘நாள் 2’ படத்தில் தனது நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார் த்ரிஷா தோசர்.