கனடா வேலைவாய்ப்பு சந்தையில் எதிர்பாராத எழுச்சி – 54,000 புதிய வேலை வாய்ப்புகள்!
கனடாவின் வேலை சந்தை நவம்பர் மாதத்தில் பொருளாதார நிபுணர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை இழப்பு ஏற்படும் என முன் கணிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராத வகையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஒக்டோபர் மாதத்தில் 6.9 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், நவம்பர் மாதத்தில் 6.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
26,000 பேர் தொழிலாளர் சந்தையிலிருந்து வெளியேறியதே இந்தக் குறைவுக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை மொத்தமாக 1,81,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொழிலாளர் சந்தை மந்த நிலையிலேயே இருந்து வந்தது. நவம்பர் மாதத்தில் வேலை வளர்ச்சி அதிகமாக இருந்தது பகுதி நேர வேலைகளில் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பகுதி நேர வேலைகளின் விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லை.
மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சுமார் 50,000 புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இது 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இளைஞர் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதை காட்டுகிறது.
இளைஞர்களின் மொத்த வேலைவாய்ப்பு விகிதம் தற்போது 55.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுகாதாரம் மற்றும் சமூக உதவித் துறையில் 46,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளன.
உணவு மற்றும் தங்குமிடம் துறையில் மிதமான வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இயற்கை வளத் துறையிலும் சிறிய அளவிலான வளர்ச்சி காணப்படுகிறது.
அதே நேரத்தில், உற்பத்தித் துறையில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்த மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளிலும் வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன.
நவம்பர் மாதத்தில் சராசரி மணிநேர ஊதியம் 3.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. உண்மையான பொருளாதார வளர்ச்சி இன்னும் மெதுவாகவே நடைபெறுகிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முழுநேர வேலைகள் குறைந்து, பகுதி நேர வேலைகள் அதிகரிப்பது ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. உற்பத்தித் துறையில்
பாரியளவிலான பணிநீக்கங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கனடா மத்திய வங்கி இம்மாதம் வட்டி விகிதம் குறித்த இறுதி முடிவை அறிவிக்க உள்ளது. சந்தை கணிப்புகளின்படி, வட்டி விகிதம் குறைய 93 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலை சந்தை தொடர்ந்து வலுவாக இருந்தால், வட்டி விகிதக் குறைப்பு தள்ளிப்போகும் வாய்ப்பும் காணப்படுகிறது.
வேலை வாய்ப்புகள் அதிகரிப்பது ஒரு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான வேலைகள் பகுதி நேரமாக இருப்பது இன்னும் கவலைக்குரிய விடயமாக உள்ளது. கனடாவின் பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருகிறதே தவிர, இன்னும் முழுமையாக வலுவடைந்துள்ளதாக கூற முடியாது.
இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது ஒரு நல்ல விடயமாக இருந்தாலும், அந்த வேலைகள் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
இந்த வேலை வளர்ச்சி கனடாவுக்கு வர விரும்பும் மாணவர்கள், PR விண்ணப்பதாரர்கள் மற்றும் புதிய குடியேறிகளுக்கு ஒரு நேர்மறை சுட்டிகாட்டாக உள்ளது.
இருப்பினும், தற்போது கிடைக்கின்ற வேலைகள் பெரும்பாலும் பகுதி நேரமாக இருப்பது வருமான நிலைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
இளைஞர்களுக்கு 50,000 வேலை வாய்ப்புகள் கிடைத்திருப்பது ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த வளர்ச்சி தொடர்ச்சியாக நீடிக்க வேண்டியது அவசியமாகும்.
தற்போது வாய்ப்புகள் இருந்தாலும், அபாயங்கள் முழுமையாக குறையவில்லை என்பதே உண்மை. வேலை எண்ணிக்கைகளை மட்டும் கருத்திற்கொண்டு கனடா முழுமையாக பாதுகாப்பான நிலையில் உள்ளது என்ற முடிவிற்கு வர முடியாது.
வேலைகள் பெரும்பாலும் பகுதி நேரமாக இருப்பத பிரதான சவாலாக உள்ளது.
உற்பத்தித் துறையில் பணிநீக்கங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
தற்போது இளைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும், அது நீண்ட காலப் பாதுகாப்பாக மாறுமா என்பது இன்னும் கேள்விக்குறியே. தற்போதைய சூழ்நிலை ஓரளவு சாதகமாகத் தெரிந்தாலும், மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய காலகட்டமாகும்.





