சீனாவில் K-விசா திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு – வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அதிருப்தி
சீன அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய K-விசா திட்டம் உள்ளூர் இளைஞர்களிடம் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலையின்றி தவிக்கும் இளம் பட்டதாரிகள் ஏற்கனவே வேலை தேட சிரமப்படும் சூழலில், இந்த விசா திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உலகத் தரத்திலான நிபுணர்களை ஈர்ப்பதற்காக ஒக்டோபர் முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விசா வகை, சீனாவின் வளர்ச்சிக்கு ஆதாரமாகும் என அதிகாரிகள் கூறினாலும், சமூக ஊடகங்களில் இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இளைஞர்களின் வேலையின்மை 19 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், 12.2 மில்லியன் புதிய பட்டதாரிகள் வேலைக்காக கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டு நிபுணர்களை அழைக்கும் முடிவை பலர் விமர்சிக்கின்றனர்.
“இங்கு வேலை தேடி தவிக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் இருக்கிறார்கள். இன்னும் வெளிநாட்டிலிருந்து திறமையாளர்களை கொண்டுவர விரும்புகிறீர்களா?” என ஒரு சமூக ஊடகங்களில் கருத்து பகிரப்பட்டுள்ளது. இது பலரால் பகிரப்படுவதுடன் ஆதரிக்கப்படுகின்றது.
K-விசா தொடர்பான ஹேஷ்டேக்குகள் 2 நாட்களில் அரை பில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளன.
சிலர், இது தேசியவாத உணர்வுகளைத் தூண்டும், அல்லது வெளிநாட்டினரை எதிர்க்கும் மனப்பான்மையை வளர்க்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். மேலும், இது சாத்தியமான இடம்பெயர்வின் முடிவற்ற விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கருதப்படுகின்றது.
இந்த திட்டம், அமெரிக்காவின் கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளை பின்னணியாகக் கொண்டு, சீனா–அமெரிக்கா தொழில்நுட்ப போட்டியில் சீனாவின் பலத்தைப் பெருக்க ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.





