தைவானுக்கு அருகில் புதிய ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை நிலைநிறுத்திய சீனா
தைவானுக்கு அருகிலுள்ள சீன இராணுவ ராக்கெட் படை (PLARF) தளத்தில் ஒரு புதிய ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் இந்தத் திட்டம் தைவானுக்கு ஒரு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும், அதேபோல் மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்க விமான தளங்கள் மற்றும் கப்பல்களைக் குறிவைக்கும் திறனையும் ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
“ஏவுகணைகளால் தைவான் அச்சுறுத்தப்படுகிறது” என்ற தலைப்பிலான நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு கட்டுரையில் சீனாவின் இராணுவ சக்தி குறித்த 2024ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிக்கையை மேற்கோள் காட்டியது.
இது சீனா 3,500 ஏவுகணைகளை சேமித்து வைத்துள்ளது, இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 1.5 மடங்கு அதிகம் என்று கூறியது.
இந்த ஏவுகணைகளில் எத்தனை தைவானை இலக்காகக் கொண்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சீன மக்கள் விடுதலை இராணுவ ராக்கெட் படையின் பிரிகேட் 616 தளம் 2020ஆம் ஆண்டு முதல் வேகமாக விரிவடைந்துள்ளதாக சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.
டோங்பெங்-17 (DF-17) ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைக்கும் சீனா தயாராகி வருவதாக அமெரிக்க கடற்படை பகுப்பாய்வு மையத்தின் ஆராய்ச்சியாளரான டெரெக் எவெலெத் உள்ளிட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில், தைவானின் பிரதான நிலப்பகுதியிலிருந்து சுமார் 579 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வசதிக்காக சீனா விவசாய நிலங்களை அழித்ததாகவும், 2021 ஆம் ஆண்டுக்குள் அது முழுமையாக உருவாக்கப்பட்டதாகவும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன எனத் தகவல் வெளியாகியுள்ளது.





