பிரிட்டன் திருச்சபையை வழிநடத்தும் முதல் பெண் பேராயர் சாரா முல்லல்லி
பிரித்தானியாவில் கேன்டர்பரியின் புதிய பேராயராக சாரா முல்லல்லி நியமிக்கப்பட்டுள்ளார். 1,400 ஆண்டுகால இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
மேலும், உலகம் முழுவதும் 85 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ஆங்கிலிகன் ஒன்றியத்தை வழிநடத்தும் முதல் பெண்மணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது முதல் பொது உரையில் மான்செஸ்டரில் ஜெப ஆலயத்தின் மீது நடந்த கொடிய தாக்குதலின் கொடூரமான வன்முறையை கண்டித்து, வெறுப்பும் இனவெறியும் நம்மைப் பிரிக்க முடியாது என்று சாரா முல்லல்லி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் ராஜினாமா செய்த முன்னாள் பேராயர் ஜஸ்டின் வெல்பிக்குப் பிறகு இவரது நியமனம் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் தேசிய சுகாதார சேவையின் (NHS) தலைமை செவிலியரான 63 வயதான இவர் 2006ல் பாதிரியாரானார் மற்றும் 2018ல் லண்டனின் முதல் பெண் பிஷப்பாக நியமிக்கப்பட்டார்.
சாரா முல்லல்லியின் நியமனம் குறித்து பிரதமர் கீர் ஸ்டார்மர், “அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, ஒன்றாக வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மூன்றாம் சார்லஸ் மன்னர், “உலகளாவிய ஆங்கிலிகன் கம்யூனியன் முழுவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.





