இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் நியமனம்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக (Archbishop of Westminster) பேராயர் ரிச்சர்ட் மோத் (Richard Moth) நியமிக்கப்பட்டுள்ளார். வத்திகான் இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, 2009 ஆம் ஆண்டு முதல் இப்பொறுப்பை வகித்து வந்த 80 வயதான கார்டினல் வின்சென்ட் நிக்கோல்ஸின் (Vincent Nichols) ஓய்வைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக Arundel மற்றும் Brighton ஆயராகப் பணியாற்றிய ரிச்சர்ட் மோத், சுமார் 60 இலட்சம் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். சமூக நீதிக்காகக் குரல் கொடுத்து வரும் இவர், சிறைச்சாலை மேம்பாடு மற்றும் அகதிகள் நலனில் அதிக அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ரிச்சர்ட் மோத், மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இவர் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கவுள்ளார்.





