இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ‘அர்த்தமற்றவை’: ஈரான்

இஸ்ரேல் தன் மீது இதுவரை காணப்படாத அளவில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அணுசக்தித் திட்டம் தொடர்பில் அமெரிக்காவுக்கும் தங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அர்த்தமற்றதாகிவிட்டது என்று ஈரான் கூறியுள்ளது.அந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவளித்ததாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
“பேச்சுவார்த்தையை அர்ரத்தமற்றதாக்கும் வகையில் அந்தத் தரப்பு (அமெரிக்கா) நடந்துகொண்டது. ஈரானைக் குறிவைக்க யூதர் ஆட்சிக்கு (இஸ்ரேல்) அனுமதித்து பேச்சுவார்த்தையும் நடத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ள முடியாது,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மெயில் பாகேய் கூறியதாக டாஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அரசதந்திர முயற்சிகளுக்கு இஸ்ரேல் பங்கம் விளைவித்ததாகவும் வாஷிங்டனின் அனுமதியின்றி இஸ்ரேலால் அவ்வாறு செய்திருக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.
இஸ்ரேலியத் தாக்குதலை அமெரிக்கா கண்டுகொள்ளாதபடி இருந்ததாக ஈரான் முன்னதாகக் குற்றஞ்சாட்டியது. வாஷிங்டன் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதே அர்த்தமுள்ள செயல் என்று வாஷிங்டன், ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் டெஹ்ரானிடம் கூறியது.
அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சுவார்த்தையின் ஆறாவது கட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் நடைபெறவிருந்தது. இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பேச்சுவார்த்தை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.