இந்திய இராணுவத்தால் மஹியங்கனை தகவல் தொடர்பு மீளமைப்பு.
கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனை பகுதியில் டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட முக்கிய தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு, இந்திய இராணுவத்தின் சத்ருஜீத் படைப்பிரிவின் ஒருங்கிணைந்த பணிக்குழுவால் மீண்டும் செயற்படுத்தப்பட்டது.
புயல் காரணமாக ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OFC) வலையமைப்பு சேதத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் முழுமையான தகவல் தொடர்பு துண்டிப்புக்கு உள்ளானதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை டெலிகாம் (SLT-Mobitel) அவசர உதவி கோரியதைத் தொடர்ந்து, இந்திய இராணுவ சமிக்ஞை பிரிவு குழுக்கள் உடனடியாக செயற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடினமான நிலப்பரப்பு மற்றும் சீரற்ற வானிலையிலும், அவர்கள் சேதமடைந்த OFC வழித்தடத்தை கண்டுபிடித்து பழுதுபார்த்துள்ளனர்.
துல்லியமான OFC இணைப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன், அவர்கள் சிவில் மற்றும் செயற்பாட்டு வலையமைப்புகளுக்கான இணைப்பை மீட்டெடுத்தனர்.
இதன் மூலம் மஹியங்கனையின் முதன்மை தகவல் தொடர்பு இணைப்பு விரைவாக மீளமைக்கப்பட்டது.
இதனிடையே சுகாதார துணை அமைச்சர் ஹன்சகா விஜேமுனி மற்றும் சுகாதார செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கே ஆகியோர், மஹியங்கனையில் இயங்கும் இந்திய இராணுவ கள வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ சேவைகளைப் பார்வையிட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அவசர சிகிச்சை, மருத்துவ சேவை மற்றும் உயிர்காக்கும் உதவிகளையும் அவர்கள் பாராட்டினர்.
இலங்கைக்கு இந்த நெருக்கடியின் போது முழுமையான மற்றும் துரிதமான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதென இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மனிதாபிமான உதவிகளுடன், முக்கிய சேவைகளை தொடர்ந்து செயற்படுத்த தேவையான அவசர தலையீடுகளும் இந்த உதவியில் அடங்குகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





