இலங்கை வலிமையாக மீண்டெழும்!” – ஜனாதிபதி அநுரவுக்கு பிரதமர் மோடி விசேட கடிதம்
டித்வா’ (Dithwa) புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவர் விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையின் நிவாரணம் மற்றும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள் குறித்து நேரில் ஆராய, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை தனது விசேட பிரதிநிதியாக பிரதமர் மோடி அனுப்பி வைத்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த கடிதத்தில் ‘அயலவருக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் கீழ், ‘சாகர் பந்து’ நடவடிக்கை (Operation Sagar Bandhu) மூலம் இந்தியக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஏற்கனவே அவசர கால உதவிகளை வழங்கியுள்ளதை இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவ சேவைகள் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளைச் சீரமைக்க இந்திய விசேட குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
இலங்கை மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவும், எதிர்கால சவால்களைத் தாங்கும் சக்தியைப் பெறவும் இந்தியா ஒரு விரிவான சலுகைப் பொதியை (Concessional Package) அறிவித்துள்ளது.
இதனைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரசாங்கத்துடன் விரிவாக ஆலோசித்துள்ளார்.
“நம்பகமான நண்பனாக இந்தியா எப்போதும் இலங்கையுடன் தோளோடு தோள் நிற்கும். இலங்கை இந்தச் சவாலில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக எழுச்சி பெறும் என்று நான் நம்புகிறேன்,” என பிரதமர் மோடி தனது கடிதத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.





