தேசிய புலனாய்வு பிரிவுக்கு புதிய தலைவராக ஜெனரல் நளிந்த நியமனம்
தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட(Nalinda Nyangoda) இன்று (28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இவருக்குரிய நியமனக் கடிதம், பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவால் நேற்று வழங்கப்பட்டது.
இந்நிலையிலேயே மேஜர் ஜெனரல் நியங்கொட இன்று ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் கவசப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நியங்கொட, இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றிய மிகவும் திறமையான சிரேஷ்ட அதிகாரி ஆவார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய நேற்று (அக்டோபர் 27) தனது 60வது வயது பூர்த்தியானதையிட்டு அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





