ஓட்டுநர் தேவையில்லை! – 2026-ல் லண்டனில் ஊபெர் ரோபோடாக்ஸி!
ஊபெர் (Uber) மற்றும் லிஃப்ட் (Lyft) ஆகிய நிறுவனங்கள் சீனத் தொழில்நுட்ப நிறுவனமான பைடு (Baidu) உடன் இணைந்து, வரும் 2026-ஆம் ஆண்டு லண்டன் வீதிகளில் ‘ரோபோடாக்ஸி’ (Robotaxi) எனப்படும் ஓட்டுநர் இல்லா வாடகைக் கார்களைச் சோதிக்கப் போவதாக இன்று (டிசம்பர் 22, 2025) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ஊபெர் (Uber) மற்றும் லிஃப்ட் (Lyft) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக பைடு (Baidu)வின் ‘அப்பல்லோ கோ’ (Apollo Go) தானியங்கி வாகனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன.
லண்டன் நகரமே இந்தச் சோதனையின் பிரதான மையமாக இருக்கும். 2026-ஆம் ஆண்டின் முதல் பகுதியில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக லிஃப்ட் (Lyft) நிறுவனம், ‘அப்பல்லோ கோ’ (Apollo Go) RT6′ என்ற பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார வாகனங்களைப் (electric vehicle) பயன்படுத்தவுள்ளது. இதில் தேவைப்பட்டால் கழற்றி மாற்றக்கூடிய ஸ்டீயரிங் வீல் (Steering wheel) வசாதியும் உண்டு.
ஆரம்பத்தில் சில பத்து வாகனங்களுடன் தொடங்கும் இந்தச் சோதனை, படிப்படியாக நூற்றுக்கணக்கான வாகனங்களாக விரிவுபடுத்தப்படும்.
பிரித்தானியாவின் ‘தன்னியக்க வாகனச் சட்டம் 2024’ (Automated Vehicles Act 2024), இத்தகைய ஓட்டுநர் இல்லா கார்களுக்குச் சாதகமான சட்டச் சூழலை உருவாக்கியுள்ளது. விபத்து ஏற்பட்டால் காரில் இருப்பவர் பொறுப்பல்ல, அந்த வாகனத்தை இயக்கும் நிறுவனமே பொறுப்பு என இந்தச் சட்டம் கூறுகிறது.
ஏற்கனவே கூகுளின் ‘வேமோ’ (Waymo google car ) நிறுவனம் லண்டனில் சோதனைகளைத் தொடங்கியுள்ள நிலையில், சீன நிறுவனமான பைடு (Baidu)-உடன் இணைந்து ஊபெர் (Uber) மற்றும் லிஃப்ட் (Lyft) களம் இறங்குவது இந்தப் போட்டியை இன்னும் சூடாக்கியுள்ளது.
மேலும் 2041-ஆம் ஆண்டிற்குள் லண்டனில் வீதி விபத்தால் ஏற்படும் மரணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்ற இலக்கை அடைய விஷன் ஜீரோ (Vision Zero) இத்தகைய ஏஐ (AI) தொழில்நுட்பங்கள் உதவும் என்று நம்பப்படுகிறது.
ஓட்டுநர் இல்லா கார்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தலாம் அல்லது அவசர காலங்களில் சாலைகளை மறிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் சீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், பிரித்தானிய மக்களின் தரவுகள் (Data Privacy) மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து சில பாதுகாப்பு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
டாக்சி ஓட்டுநர்களின் சங்கங்கள், “யாருக்கு இந்த ஓட்டுநர் இல்லா கார்கள் தேவை?” என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு, இது ஒரு வெறும் பகட்டு (Gimmick) என்றும் விமர்சித்துள்ளன.
இருப்பினும் 2026-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இருந்து லண்டன் மக்கள் முதல் முறையாக இந்த ரோபோடாக்ஸிகளில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இது எதிர்காலப் போக்குவரத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.





