ரன்வல விபத்தில் கடமை தவறிய பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகன விபத்து தொடர்பான சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் விசாரணை ஒன்று நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விசாரணையில், சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC), விபத்து குறித்து விசாரணை நடத்திய போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தைக் கண்காணிக்கும் சிரேஷ்ட வர்த்தமானி அறிவித்தல் பெற்ற அதிகாரிகள் (Senior Gazetted Officers) தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் மூலம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.





