சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு துணை நிற்கும் சீனா!
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களின்போது இலங்கையுடன் நெருக்கமாகச் செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிரந்தரக் குழுவின் உப தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கொழும்பு வந்துள்ள வாங் டோங்மிங்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (17) நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு, மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
பேரிடரின்போது இலங்கைக்கு சீன அரசாங்கம் வழங்கிய துரித உதவிகளுக்காகப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார் என பிரதமரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தின் பின்னர் இலங்கை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவருவதாகவும், மீளக்கட்டியெழுப்பும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட வாங் டோங்மிங் , மறுசீரமைப்புப் பணிகளுக்கும் சீனா முழுமையான ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார்.
பிரதமரின் அண்மைய சீன விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயாராக இருப்பதாக சீன பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தொடர்ச்சியாகப் பங்களிப்பு வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் சிரேஸ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





