அமெரிக்காவில் வெடித்துச் சிதறிய சரக்கு விமானம் – 12 பேர் பலி – கருப்புப் பெட்டி மீட்பு
அமெரிக்காவில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கென்டக்கி மாநிலத்திலுள்ள லூயிஸ்வில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் வெடித்துச் சிதறியுள்ளது.
MD-11 என்ற சரக்கு விமானத்தில் பணியமர்த்தப்பட்ட மூன்று பணியாளர்களும், தரையில் குறைந்தது ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளதாகக் கென்டக்கி மேயர் கிரேக் கிரீன்பெர்க் தெரிவித்துள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளான நிலையில், சுமார் 800 மீட்டர் தூரம் வரை தீ பரவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகத் தரையில் பணியில் ஈடுபட்டிருந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இதேவேளை, விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விமானத்தின் இறக்கைகளில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இயந்திரம் ஒன்று தனியாகப் பிரிந்ததாகவும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அதிகாரி டாட் இன்மேன் தெரிவித்துள்ளார்.
இதன்போது எரிபொருள் தொட்டி வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் காக்பிட் குரல் பதிவுகள் மீட்கப்பட்ட நிலையில், அது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.





