போண்டி துப்பாக்கிச்சூடு : தவறான பிரச்சாரத்திற்கு பலியான பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தனது நாடு தவறான பிரச்சாரத்திற்கு பலியாகியுள்ளதாக பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் பாகிஸ்தானியர் என்ற தவறான கூற்றுகளை ஆன்லைனில் பலர் பரப்பிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய செய்தி தொடர்பாளர் அத்தாவுல்லா தரார் (Attaullah Tarar) மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஹனுக்காவைக் கொண்டாடும் யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக தவறான தகவல்கள் பரவத் தொடங்கியதாக தெரிவித்த அவர், சந்தேக நபர்களில் ஒருவரை “நவீத் அக்ரம் என்ற பாகிஸ்தானியர்” என அடையாளப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூற்றுக்கள் டிஜிட்டல் தளங்களில் வேகமாகப் பரவியதாக தெரிவித்த அவர், சில ஊடகங்கள் சரிபார்ப்பு இல்லாமல் மீண்டும் மீண்டும் இவ்வாறு செய்தியை பரப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.




