ஐரோப்பா செல்ல முயற்சித்த இலங்கையர் லாட்விய எல்லையில் சடலமாக மீட்பு
 
																																		ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் செல்ல முற்பட்ட இலங்கை நாட்டவர் ஒருவர், லாட்விய எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பயணிக்க முயற்சித்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 27-28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக லாட்விய நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த இருவரும் இலங்கையர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாட்விய எல்லைக் காவலர்கள், அவர்களில் மற்றையவரைக் கைது செய்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
 
        



 
                         
                            
