டிஆர்பி-யை எகிற வைக்க வருகின்றது பிக்பாஸ் சீசன் 7… தரமான போட்டியாளர்களை இறக்கும் விஜய் டிவி
![](https://iftamil.com/wp-content/uploads/2023/07/3585-1280x700.webp)
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரவேற்பு பெற்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டால் அத்தனை ஷோக்களும் ஓரம் கட்டப்பட்டு விடும். அந்த அளவுக்கு டிஆர்பியில் இந்த நிகழ்ச்சி தான் சக்கை போடு போடும்.
இதற்கு போட்டியாளர்கள் ஒரு காரணம் என்றாலும் உலக நாயகனின் சாமர்த்தியமான பேச்சு தான் முக்கிய காரணம். அந்த வகையில் இந்த சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காகவே அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்த சீசனுக்கான ப்ரோமோ சூட்டிங் முடிந்த நிலையில் எப்போது நிகழ்ச்சி தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
அதன்படி வரும் அக்டோபர் மாதம் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவி தரமான பல போட்டியாளர்களை நிகழ்ச்சியில் களம் இறக்க இருக்கிறது. அதில் சில உறுதியான போட்டியாளர்களின் பெயர்களை பற்றி இங்கு காண்போம்.
இந்த சீசனில் தொகுப்பாளினி ஜாக்குலின் கலந்து கொள்ள இருக்கிறாராம். அதைத்தொடர்ந்து ஏற்கனவே சிம்புவுடன் சண்டை போட்டு விஜய் டிவியின் டிஆர்பியை ஏற்றிய பப்லு பிரித்வி ராஜும் களமிறங்க உள்ளார்.
தன்னைவிட பல வயது குறைந்த இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பலருக்கும் ஷாக் கொடுத்த இவர் சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார். அந்த வகையில் இவர் இந்த நிகழ்ச்சிக்கு சரியான தேர்வு தான். அதேபோன்று கடந்த சீசனில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய ரட்சிதாவின் கணவர் தினேஷும் இந்த முறை களமிறங்க உள்ளார்.
சமீபத்தில் இந்த ஜோடியின் பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்தபடியாக நடுரோடு என்றும் பாராமல் பயில்வான் உடன் மல்லுக்கு நின்ற ரேகா நாயர், பெண் பஸ் ஓட்டுனரான ஷர்மிளா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் உமா ரியாஸ், ஷாலு ஷம்மு, KPY சரத், மிலா ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பத்து போட்டியாளர்களும் பிக்பாஸில் களமிறங்க உள்ளனர்.