இலங்கை செய்தி

தமிழ் தரப்பினருடன் சஜித் சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

சஜித் பிரேமதாசவின் அழைப்பில் எதிர்க்கட்சித் தலைவரது அலுலகத்தில் இன்று காலை7.30 மணியளவில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதம அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு பொது வேட்பாளர் களமிறங்கியுள்ள நிலையிலேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக சஜித் பிரேமதாச பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பதற்கான அழைப்பினை தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார்.

இந்த அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும் சஜித் பிரேமதாச தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்காக முன்னெடுக்க உள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் இச்சந்திப்பில் பங்கேற்பதென முடிவு செய்தனர்.

இச் சந்திப்பில், பிரதானமாக தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கும் முகமான சமஸ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும் எட்டப்படாமல் இருப்பதனாலேயே பொது வேட்பாளர் என்ற முடிவு வலுப்பெற்றது என்பது தெளிவு படுத்தப்பட்டது.

இதுவரை காலமும் தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ பிரதம மந்திரியாகவோ பதவி வகிக்கக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் இம்முறை அச்சந்தர்ப்பம் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தான் முடிவு காண்பதாக தெரிவித்தார்.

ஆகவே கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்துக் கொண்டு தன்னையும் அந்த வேட்பாளர்களோடு அல்லது பதவிகளை பெற்றுக் கொண்டவர்களோடு ஒப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு சகல உரிமையும் இருக்கின்றது என்பதையும் அதைத்தான் மதிப்பதாகவும் தெரிவித்த அவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற உங்களுடைய நிலைப்பாட்டுக்கு தான் மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும் தேசிய ரீதியான தேர்தலில் இன, மொழி, மத மற்றும் பிரதேச ரீதியான அடையாளத்தோடு வேட்பாளர்கள் முன்னிலைப் படுத்துவது ஒற்றுமையை சீர்குலைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை முதல் கட்டமாக பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் ஊடாகக் கொண்டுவரப் பட்ட மாகாண சபைக் கட்டமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக தான் தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.

அதற்காக தான் வெளிப்படையாகவும் பேசி வருவதாகவும் யாருக்கும் பயந்து சாக்குப்போக்குகளை சொல்வது இல்லை என்றும் தெரிவித்தார்.

இவ்விடயத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும் ஜனாதிபதியாக வெற்றி பெறும் பட்சத்தில் உடனடியாக மாகாண சபை அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப் படுத்துவதாகவும் தெரிவித்தார்

தமிழ் மக்கள் சார்பில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, எஞ்சியுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பை தடுப்பது, தமிழ் இளைஞர்கள் யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவது, விசாரணை என்ற போர்வையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய மீனவர்களுடைய அத்துமீறலினால் எமது மீனவர்கள் படுகின்ற துன்பம், உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இப்படியான பிரச்சினைகளுக்கு தான் சிறப்புப் பணிக் குழுக்களை அமைத்து தனது நேரடி மேற்பார்வையின் கீழ் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

தான் இலங்கையில் உள்ள அனைத்து இனங்களையும் அனைத்து மதங்களையும் நேசிப்பவன் என்றும் தான் ஒரு இனவாதி அல்ல என்பதையும் தமிழ் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே வரும் தேர்தலிலே தனக்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவருடைய கருத்துக்களை பரிசீலித்து மற்றவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்துவதாக தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content