Tamil News

எந்த அவசியமும் இல்லை!! ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ராஷ்மிகா மந்தனா பதில்

தன்னை பற்றி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்திருக்கிறார். அவரது ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஃபர்ஹானா படத்தின் புரோமோஷனுக்காக கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், தெலுங்கு திரையுலகம் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். கம்பேக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு நல்ல படம் அமைய வேண்டும். நல்ல கதாபாத்திரங்கள் நடித்தால் மீண்டும் தெலுங்கில் நடிக்க தயாராக இருக்கிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ரஷ்மிகா மந்தனா அந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் நான் இன்னும் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிக சிறப்பாகவே பொருந்தியிருப்பேன் என கூறியிருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. இதனையடுத்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ” நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து நீங்கள் என்மீது காட்டி வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதாரவிற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என் மீதும், பணியின் மீதும் அன்பை செலுத்தும் அற்புதமான ரசிகர்களை பெற்றிருப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். சமீபத்தில் ஒரு பேட்டியின் போது, என்னிடம் சினிமாவில் நான் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கு தெலுங்கு சினிமா ரொம்ப பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிப்பேன். உதாரணமாக புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தேன். ஆனால் என்னுடைய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகாவின் கடின உழைப்பை ஒருபோதும் நான் குறை கூறவில்லை.எனது பேச்சால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. மேலும், திரையுலகை சார்ந்த சக நடிகர், நடிகைகள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதை இதன்மூலம் தெளிவுப்படுத்துகிறேன். நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு விட்டது” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் அன்பே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாக புரிந்துகொண்டேன். இப்போதுதான் இதை பார்த்தேன். எனவே நீங்கள் விளக்கம் கூறுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றே நினைக்கிறேன். உங்கள் மீது நான் அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். அது உங்களுக்கும் தெரியும். மீண்டும் உங்கள் ஃபர்ஹானா படத்துக்கு என்னுடைய ஆல் தி பெஸ்ட்” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version