Site icon Tamil News

சட்டைப்பையில் வெடித்து சிதறிய செல்போன்… பைக்கில் சென்ற மூவர் படுகாயம்!

கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து சிதறிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர், சோதனை பாளையம் பகுதியில் நடைபெறுகிற சுப நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோரும் அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பராஜ் செல்போனை பாக்கெட்டில் இருந்து தூக்கி வீச முயற்சித்த போது, இரு சக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடும் வெயில் காரணமாக செல்போன் வெடித்து சிதறி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version