Tamil News

வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1050 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் மலரவனின் தலைமையில் கடந்த 5 நாட்களில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1050 பேருக்கு கண்புரை (Cataract Surgery) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி சிகிச்சைக்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்களின் கிராமங்களில் இருந்து விசேட பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யாழ போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை, மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கண் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பல்வேறு நிலை உத்தியோகத்தர்கள் மேற்படி சிகிச்சை முகாமை சிறப்பாக செய்து முடித்தனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Assist RRR நிறுவனம் மேற்படி நிகழ்விற்கான ஒழுங்கமைப்பில் பெரும் பங்களிப்பைச் செய்ததுடன் சத்திர சிகிச்சைக்கு தேவையான கண் வில்லைகள் மற்றும் பொருட்களை அலாக்கா Foundation மற்றும் ஆனந்தா Foundation வழங்கி வருகிறது.

பல்வேறு தரப்பின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் மேற்படி சிறப்பு முகாம் வெற்றிகரமாக நிறைவேறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இறுதி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அனோஜ் றொட்றிகோ கலந்து சிறப்பித்துள்ளனர்.

Exit mobile version