காசாவிற்கு அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பலை சிறை பிடித்த இஸ்ரேல்!

காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பலை இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றியுள்ளன.
இத்தாலிய தீவான சிசிலியில் இருந்து புறப்பட்ட அந்தக் கப்பலுடனான உறவுகள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக உதவியை அனுப்பிய சுதந்திர புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.
கப்பலில் இருந்தவர்கள் கைகளை உயர்த்திய நிலையில் இருப்பதைக் காட்டும் புகைப்படமும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
கப்பல் இஸ்ரேலிய கரைக்கு பாதுகாப்பாக பயணித்து வருவதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கப்பலைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் முன்னர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் போராளிகளுக்கு ஆயுதங்கள் செல்வதைத் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.