Tamil News

பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.அத்துடன் சர்வதேச தரங்களுக்கு அமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதையும் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கண்டனங்கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தது.இதனை தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் பயங்கரவாதத்திற்க்கு பரந்த வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளதுடன் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

 

 

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை திட்டமிட்ட முறையில் மீறுவதற்கான அதிகாரத்தை, அதிகாரிகளுக்கு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இந்த சட்டம் அமைதியான விதத்தில் தன்னை விமர்சிப்பவர்களையும், சிறுபான்மை சமூகத்தவர்களையும் இலக்குவைத்து கடுமையான சட்டங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் எனவும் கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version