Site icon Tamil News

9 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடும் விராட், ரோகித்?

விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 9 ஆண்டுகளானது. இந்தநிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் அதிரடி முடிவால், இருவரும் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளார்கள் என்ற செய்திகள் வந்துள்ளன.

தற்போது இந்திய அணியின் அனுபவமிக்க வீரர்கள் என்றால், விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாதான். அதனால், இவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டார்கள். அதேபோல், வலைப் பயிற்சிக்கு கூட அவ்வப்போது வருவதில்லை. சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே அவர்கள் விளையாடி வருகிறார்கள். இதற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் ட்ராவிட் அவர்களை உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும், வலைப் பயிற்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்ற எந்த அழுத்தமும் கொடுத்ததில்லை.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுதம் கம்பீர் மிகவும் ஸ்ட்ரிக்ட் கோச்சாக இருந்து வருகிறார்.

இவர் அனைத்து இந்திய வீரர்களுமே உள்ளூர் போட்டிகளில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருபவர். இந்திய அணி அடுத்து வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. செப்டம்பர் 19 அன்று சென்னை சேப்பாக்கத்தில் அந்த தொடரின் முதல் போட்டி தொடங்க உள்ளது.

அந்த போட்டிக்கு முன்பாக இந்தியாவில் துலீப் ட்ராபி என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கவுதம் கூறியுள்ளார். அவர் பேச்சைக் கேட்கவில்லை என்றால், அணித் தேர்ந்தெடுப்பில் மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆகையால், தற்போது முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித், துலீப் தொடரின் முதல் சுற்றை விட்டுவிட்டு இரண்டாம் சுற்றில் கலந்துக்கொள்ளவார்கள் என்று கிரிக்கெட் வட்டாரத்தினர் பேசிக்கொள்கின்றனர். மேலும் அந்த தொடர் முழுவதும் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல், அக்சர் பட்டேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் போன்ற பிற டெஸ்ட் அணி பேட்ஸ்மேன்களும் விளையாட உள்ளனர்.

செப்டம்பர் 12ம் தேதியிலிருந்து நடைபெறும் இரண்டாவது சுற்றில், விராட்டும் ரோகித்தும் கலந்துக்கொள்வார்கள். மேலும் பும்ராவிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், பங்களாதேஷ் உடனான போட்டிகளில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது சந்தேகம்தான்.

Exit mobile version