Site icon Tamil News

இலங்கை பொலிஸாரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

நீண்டகாலமாக பேசுபொருளாகயிருக்கும் மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைக்கு வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களாக அமைதியான முறையிலேயே போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில் எங்களை கைதுசெய்ததானது இலங்கை பொலிஸாரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு சென்றுகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் நேற்று பிணையில் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்த பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்கள்,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ள,யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சிந்துஜன் கருத்து தெரிவிக்கையில்,

”மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களுக்கு குரல்கொடுக்கும் வகையில் வடகிழக்கு பல்கலைக்கழக சமூகமாக இணைந்து நாங்கள் பண்ணையாளர்களின் நிலங்களை அபகரிக்கப்படுவதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.இதன்போது பொது போக்குவரத்துக்கு ஏதும் தடைகள் ஏற்படாமலும் எங்களது உரிமையினை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version