Site icon Tamil News

நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து அவர்களுக்கெதிராக தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மாத்திரமே கடந்த வாரம் சகல எரிபொருட்களிலும் குறைந்தபட்ச கையிருப்பை பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.

255 எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எந்தவொரு எரிபொருளிலும் குறைந்த பட்ச இருப்பை பேணத் தவறியுள்ளமையும் இனங்காணப்பட்டுள்ளது.

அதேவேளை 363 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏதேனும் ஒரு எரிபொருள் இருப்பு மாத்திரமே பேணப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறு ஒப்பந்தங்களுக்கு முரணாக செயற்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

Exit mobile version