Site icon Tamil News

வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் ஆபத்து – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

டெங்கு நோய் நிவாரணியாக Non-steroidal anti-inflammatory drugs வகை வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் மரணங்கள் சம்பவிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஊக்குவிப்பு செயலகம் இது தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

கடும் காய்ச்சல் மற்றும் அதிக உடல்வலி மற்றும் பாரிய தலைவலி காரணமாக மக்கள் மேற்படி வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு வருவதாகவும் அதனால்

சில மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அச்செயலகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுபோன்ற வலி நிவாரணிகளை நோயாளர் பெற்றுக் கொள்வதானால், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த வகையிலும் அதனை உட்கொள்ள வேண்டாமென்றும் சுகாதாரத் துறை எந்த விதத்திலும் அதற்கான அனுமதியை வழங்காது என்றும், அந்தச் செயலகம் அறிவித்துள்ளது.

டயிய்லோபேடேக் சோடியம், இப்யுப்ரோபன், மேபேநமிக்எயிட், இன்டோமெதசின், நெப்ரொக்ஸ் சென், செலேகொக்சிப், எஸ்பிரின், ஆகிய மருந்துகள் பல்வேறு வர்த்தகப் பெயர்களில் வலி நிவாரணிகளாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த மாத்திரைகள் வலி நிவாரணியாக அமைந்தாலும் டெங்கு நோயின் போது அவற்றைப் பாதிவித்தால் மோசமான நிலை உருவாகுமென்றும், மரணமும் சம்பவிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களுக்கு முதலில் சிறந்த ஓய்வைப் பெற்றுக் கொள்வது முக்கியம். அத்துடன் நீர் ஆகாரத்தை அதிகரிப்பது சிறந்த பலனளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அச்செயலகம் தேவைப்பட்டால் பெரசிட்டமோல் மாத்திரையை மாத்திரம் உபயோகப்படுத்துமாறும் கேட்டுள்ளது.

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமானால், பொருத்தமான மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும் அல்லது உடனடியாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவது சிறந்தது என்றும் அச்செயலகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version